செங்கரும்பு ஏந்தி தலைமுடியுடன் தண்டாயுதபாணி திருக்கோயில் | Dandayuthapani temple with red cane carrying hair
செங்கரும்பு ஏந்தி தலைமுடியுடன் தண்டாயுதபாணி திருக்கோயில் :
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் கிராமத்தில் தண்டாயுதபாணி திருக்கோயில் உள்ளது.
கோயிலின் சிறப்புகள்
பொதுவாக தண்டாயுதபாணி கடவுள் மொட்டையாண்டியாக காட்சியளிப்பார். ஆனால் இங்குள்ள கடவுள் தலையில் முடியுடன் மிகவும் அழகாக காட்சியளிக்கிறார்.
இத்தலத்தின் மூலவரான தண்டாயுதபாணி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சூரியன் மறையும் போது சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது.அப்போது சூரிய அஸ்தமனம் ஸ்வாமியின் பாதத்திலிருந்து தொடர்ந்து முகம் வரையிலும் விழுவது மிகவும் விசேஷமானது.
மேலும் இத்தல முருகன் 4 அடி உயரத்தில் 11 கணுக்கள் கொண்ட செங்கரும்பை கையில் ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். வேறு எந்த முருகன் தலத்திலும் காண முடியாத அரிய காட்சி இதுவாகும். அலங்காரத்தின் போது மட்டும் அவருக்கு வேலும் சேவல் கொடியும் வைக்கிறார்கள்.
மற்றொரு சிறப்பு
முருகப் பெருமானின் படைத்தளபதியான வீரபாகு இக்கோயிலில் வீரபத்திர சுவாமியாக அருள்பாலிக்கிறார். இம்மலை அடிவாரத்தில் விநாயகர், பாதையின் நடுவில் இடும்பன், கோவில் வளாகத்தில் ராஜகணபதி, வீரபாகு ஆகியோர் தனிச்சன்னதியில் காட்சியளிக்கின்றனர்.
பொதுவாக எல்லாக் கோயில்களிலும் திருக்கல்யாணம் ஒரு நாள் மட்டுமே நடைபெறும். ஆனால் இங்கு ஒரே திருவிழாவில் ஒரு நாள் விட்டு ஒருநாள் என மூன்று முறை திருமணம் மிக சிறப்பாக நடைபெறுகிறது.
திருவிழாக்கள்
இக்கோயிலில் பங்குனி உத்திரம், தைப்பூச தேர்த்திருவிழா, கந்த ஷஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், ஷஷ்டி, ஆடிக்கிருத்திகை ஆகியவை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
நேர்த்திக்கடன்கள்
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறிய பின் முடி காணிக்கை, காவடி எடுத்தல், துலாபாரம், கால்நடை தானம் என நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
மேலும் பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், எலுமிச்சை ஆகியவற்றால் அபிஷேகம் செய்தும் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
பிரார்த்தனைகள்
திருமண வரம் மற்றும் குழந்தை வரம் வேண்டுவோர் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
நோய்கள், உடல் உபாதைகள் நீங்கவும், வழக்கு தொல்லைகள் விலகவும், தொலைந்து போன பொருட்கள் கிடைக்கவும், வியாபார பிரச்சனைகள் விலகவும் முருகப்பெருமானை வேண்டிக்கொள்கிறார்கள்.
அமைவிடம்
பெரம்பலூரில் இருந்து சுமார் 19 கி.மீ தொலைவில் செட்டிகுளம் என்ற கிராமம் உள்ளது. செட்டிக்குளத்திலிருந்து இக்கோயிலுக்கு செல்ல வாகன வசதிகள் உள்ளது.
நாமும் இத்திருத்தலம் சென்று இறைவன் அருள் பெறுவோம்.
